



திரு வினீத் ஜெயின் அவர்களே, தொழில்துறை தலைவர்களே, தலைமை நிர்வாக அதிகாரிகளே, மதிப்புக்குரிய இதர பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கடந்த முறை ஈடி நவ் உச்சிமாநாட்டில் நான் பங்கேற்ற போது, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், எங்களின் மூன்றாவது பதவிக்காலத்தில் புதிய வேகத்துடன் பாரதம் செயலாற்றும் என்று நான் பணிவுடன் குறிப்பிட்டிருந்தேன். அந்த வேகம் தற்போது, நடைமுறையாகியிருப்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். நாடும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய அரசு அமைந்தபின், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களின் வாழ்த்துகளை பிஜேபி- என்டிஏ தொடர்ந்து பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியத்தை ஒடிசா மக்கள் வேகப்படுத்தினர். பின்னர், ஹரியானா மக்கள் தங்களின் ஆதரவை அளித்தனர். தற்போது, தில்லி மக்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டுமக்கள் எவ்வாறு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு இவை அங்கீகாரமாகும்.
நண்பர்களே,
நீங்கள் குறிப்பிட்டது போல், அமெரிக்கா – பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நான் பயணம் மேற்கொண்ட பின் நேற்றிரவுதான் நாடு திரும்பினேன். இன்று, உலகின் பெரிய நாடுகளாக இருந்தாலும், உலகளாவிய அமைப்புகளாக இருந்தாலும், இந்தியா மீது அவை கொண்டுள்ள நம்பிக்கையின் அளவு முன் எப்போதும் காணப்படாததாக உள்ளது. பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டின் விவாதங்களிலும் இது பிரதிபலித்தது. எதிர்காலம் பற்றிய உலகளாவிய விவாதங்களில் இந்தியா இப்போது மையமாக இருப்பது மட்டுமின்றி சில துறைகளில் முன்னிலையும் வகிக்கிறது.
நண்பர்களே,
முந்தைய அரசுகள் சீர்திருத்தங்களைத் தவிர்த்து விட்டன. இதனை நாம் மறந்துவிடக்கூடாது. தற்போது சீர்திருத்தங்கள் இந்தியாவை முன்னேற்றி வருகின்றன. அண்மைக்காலம் வரை இந்தியாவில் 1860-ம் ஆண்டின் குற்றவியல் சட்டங்கள்தான் அமலில் இருந்தன. நாடு விடுதலை அடைந்த பிறகும், இவற்றை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில், காலனிய மனப்போக்கை நாம் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். ஆனால், பல லட்சம் மனித மணிநேர உழைப்புக்குபின் நாங்கள் பாரதிய நியாய சன்ஹிதா என்பதைக் கொண்டுவந்துள்ளோம். இந்திய நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தது. இது அமலுக்கு வந்து 7-8 மாதங்கள் தான் ஆகின்றன என்றாலும் மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகின்றன.
நண்பர்களே,
சொத்துரிமையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் சொத்துரிமைகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஐநாவின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் பல கோடி மக்கள் தங்களின் சொத்துக்கு சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறாமல் உள்ளனர். இதன் காரணமாக எங்கள் அரசு ஸ்வமித்வா திட்டத்தை தொடங்கியது. மூன்று லட்சம் கிராமங்களில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, 2 கோடியே 25 லட்சம் மக்கள் தற்போது சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
எதிர்மறை எண்ணங்களுக்குப் பதிலாக நேர்மறை எண்ணங்கள் என்ற அணுகுமுறை முழுமையான மாற்றத்தைத் தந்துள்ளது. ஏற்கனவே, நூற்றுக்கும் அதிகமான மாவட்டங்கள் பின்தங்கியவை என அடையாளம் காணப்பட்டிருந்தன. ஆனால், நான் அவற்றை முன்னேற விரும்பும் மாவட்டங்கள் என்று அழைத்தேன். இந்த மாவட்டங்களுக்கு இளம் அதிகாரிகளை நியமித்து மிக நுட்பமான வகையில், நிர்வாகத்தை மேம்படுத்த பணியாற்றினோம். சிறப்பு முகாம்கள் நடத்தி அரசின் முக்கிய திட்டங்களை இயக்க கதியில் செயல்படுத்தினோம். தற்போது, முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பல ஊக்கமளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது மக்களுக்கும், அரசுக்கும், வணிகத் தலைவர்களுக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. இந்த நம்பிக்கையானது முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். மக்களிடையே இந்த நம்பிக்கையை வலுப்படுத்த எங்கள் அரசு அயர்வின்றி பாடுபடுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நம்பிக்கையான சூழலை நாங்கள் உருவாக்குகிறோம். நீடித்த வளர்ச்சிக்கு உகந்த நிலையான, ஆதரவான கொள்கைகளை வணிக நிறுவனங்கள் நம்புவதை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த நம்பிக்கையை ஈடி நவ் உச்சிமாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய வார்த்தைகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மிக்க நன்றி!
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது மக்களுக்கும், அரசுக்கும், வணிகத் தலைவர்களுக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. இந்த நம்பிக்கையானது முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். மக்களிடையே இந்த நம்பிக்கையை வலுப்படுத்த எங்கள் அரசு அயர்வின்றி பாடுபடுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நம்பிக்கையான சூழலை நாங்கள் உருவாக்குகிறோம். நீடித்த வளர்ச்சிக்கு உகந்த நிலையான, ஆதரவான கொள்கைகளை வணிக நிறுவனங்கள் நம்புவதை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த நம்பிக்கையை ஈடி நவ் உச்சிமாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய வார்த்தைகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மிக்க நன்றி!