Quote எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் தான் இந்தியாவிற்கு தற்போது தேவை: பிரதமர் மேற்குவங்கத்தை முக்கிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மையமாக உருவாக்குவதற்கு நாங்கள் தளர்வறியாமல் பணியாற்றுகிறோம்: பிரதமர்

மேடையில் வீற்றிருக்கும் மேற்குவங்க ஆளுனர் திரு.ஜெகதீப் தங்கர் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு.தர்மேந்திர பிரதான் மற்றும் தேபஸ்ரீ சவுத்ரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்து அதிகாரி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் தபஸ் மண்டல் அவர்களே, சகோதரர்களே, சகோதரிகளே!

மேற்குவங்கம் உட்பட, ஒட்டுமொத்த கிழக்கு இந்தியாவிற்கும், இன்றைய தினம் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. கிழக்கு இந்தியாவின் இணைப்பு வசதிகள் மற்றும் தூய்மையான எரிபொருளில் தன்னிறைவு பெறுவதில், இன்றைய தினம் முக்கியமான நாளாகும். குறிப்பாக, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் எரிவாயு இணைப்பை வழங்கக்கூடிய பெருந்திட்டங்கள், இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இன்று அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட நான்கு திட்டங்களும், மேற்குவங்கம் உட்பட, கிழக்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வாழ்க்கையை எளிதாக்கவும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதையும் மேம்படுத்தும். அத்துடன், இந்தத் திட்டங்கள், ஹால்டியாவை நவீன நகராக மாற்றவும், நாட்டின் மிகப்பெரிய இறக்குமதி-ஏற்றுமதி மையமாக மாற்றவும் உதவும்.

|

நண்பர்களே,

எரிவாயு சார்ந்த பொருளாதாரம் என்பது, இந்தியாவிற்கு தற்போது தேவை. ஒரே தேசம், ஒரே எரிவாயுத் தொகுப்பு என்பது, இந்தத் தேவையை நிறைவேற்ற முக்கியமான இயக்கமாகும். இதற்காக, எரிவாயுக் குழாய் கட்டமைப்பை விரிவுபடுத்துவதோடு, இயற்கை எரிவாயு விலையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாகவே, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில், பல்வேறு பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது முயற்சிகளின் விளைவு, இன்றைக்கு இந்தியா, ஆசியாவில், அதிகளவிற்கு எரிவாயுவை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. தூய்மையான மற்றும் குறைந்த விலையிலான எரிசக்திக்காக, ‘ஹைட்ரஜன் இயக்கம்‘ ஒன்றை இந்தியா அறிவித்துள்ளது, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் தூய்மை எரிபொருள் இயக்கத்திற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்த நாடு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு வாய்ப்பை வழங்கியபோது, வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியிருந்த கிழக்கு இந்தியாவை மேம்படுத்த உறுதியேற்று, பயணத்தைத் தொடங்கினோம். கிழக்கு இந்தியாவில் உள்ள மனிதகுலத்திற்கும், வர்த்தகத்திற்கும் தேவையான நவீன வசதிகளை உருவாக்க, நாங்கள் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், துறைமுகங்கள் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் பெரும் பிரச்சினையே, பாரம்பரிய இணைப்பு மற்றும் எரிவாயு இணைப்பு இல்லாதது தான். எரிவாயு இல்லாததால், புதிய தொழிற்சாலைகளைப் பற்றி மறந்ததோடு, கிழக்கு இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய தொழிற்சாலைகளும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கிழக்கு இந்தியாவை, நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களோடு இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

|

நண்பர்களே,

பிரதமரின் உர்ஜா கங்கா குழாய்வழிப்பாதை, அதன் இலக்கை அடையும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு, அதே குழாய்வழிப்பாதை (எரிவாயுக்குழாய்)-யின் பெரும் பகுதி, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 350 கிலோமீட்டர் தூர தோபி – துர்காபூர் எரிவாயுக்குழாய், மேற்குவங்கத்தின் 10 மாவட்டங்கள் மட்டுமின்றி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் நேரடியாக பயனடையும். இந்த எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியின்போது, மக்களுக்காக, சுமார் 11 லட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது சமையலறைக்குத் தேவையான குழாய்வழி எரிவாயுவை குறைந்த விலையில் பெறுவதோடு, குறைந்த அளவிலான மாசுவை வெளிப்படுத்தக் கூடிய வாகனங்களை எரிவாயு மூலம் இயக்க முடியும். அதேவேளையில், இத்திட்டம், துர்காபூர் மற்றும் சிந்த்ரி உரத் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும். இந்த இரண்டு தொழிற்சாலைகளின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தேவையான அளவிற்கு, குறைந்த விலையிலான உரம் விவசாயிகளுக்குக் கிடைக்க வகை செய்யும். ஜக்தீஸ்பூர் – ஹால்டியா தடத்தில், துர்காபூர் – ஹால்டியா பிரிவு பணிகளையும், பொகாரோ – தம்ரா எரிவாயுக் குழாய் பணிகளையும் நிறைவேற்றி முடிக்க முயற்சிக்குமாறு, கெயில் (இந்திய எரிவாயு ஆணையம்) மற்றும் மேற்குவங்க அரசை வலியுறுத்த நான் விரும்புகிறேன்.

நண்பர்களே,

இந்த பிராந்தியத்தில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) கட்டமைப்பை, இயற்கை எரிவாயு கட்டமைப்புடன் இணைத்து வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உஜ்வலா திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, கிழக்கு இந்தியாவில் எல்.பி.ஜி. எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, எரிவாயுத் தேவையும் அதிகரித்துள்ளது. உஜ்வலா திட்டத்தின்கீழ், மேற்குவங்கத்தில் உள்ள சுமார் 90 லட்சம் சகோதரிகள் மற்றும் புதல்விகள், இலவச எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர், எஸ்.டி/எஸ்.சி பிரிவினர் ஆவார்கள். 2014-ல் மேற்குவங்கத்தில் எல்.பி.ஜி. எரிவாயு இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமாகத்தான் இருந்தது. எங்களது அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, மேற்குவங்கத்தில் எல்.பி.ஜி எரிவாயு இணைப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை, தற்போது 99 சதவீதத்தைக் கடந்துள்ளது. 41சதவீதம் எங்கே, 99 சதவீதம் எங்கே! இந்த நிதிநிலை அறிக்கையிலும், உஜ்வலா திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏழைகளுக்கு மேலும் ஒரு கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஹால்டியாவில் அமைந்துள்ள சமையல் எரிவாயு இறக்குமதி முனையம், இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது, மேற்குவங்கம், ஒடிசா, பிகார், ஜார்கண்ட், சட்டிஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்தத் துறையின் மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயு இணைப்பைப் பெறுவதோடு, இவர்களில் சுமார் ஒரு கோடி பேர் உஜ்வலா திட்டப் பயனாளிகளாக இருப்பார்கள். அதேவேளையில், இங்குள்ள இளைஞர்களுக்கு பெருமளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நண்பர்களே,

தூய்மையான எரிபொருள் வழங்குவதென்ற நமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பிஎஸ்-6 எரிபொருள் ஆலையின் திறன் விரிவாக்கப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஹால்டியா சுத்திகரிப்பு ஆலையின் இரண்டாவது கேடலிடிக்-டீவாக்ஸிங் பிரிவு செயல்பாட்டிற்கு வரும்போது, உயவு எண்ணெய்க்காக, வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறைக்கப்படும். இது அரசுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், ஏற்றுமதித் திறனை உருவாக்கும் சூழலை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் தொழில் மையமாக உருவாக்க, நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியும் இதில் அடக்கம். கொல்கத்தாவில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நவீனப்படுத்த, பல ஆண்டுகளாக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹால்டியா துறைமுகத்தின் கப்பல் நிறுத்தும் வளாகத்தின் திறன் மற்றும் அண்டை நாடுகளுடனான இணைப்பை வலுப்படுத்துவதும் அவசியம். தற்போது கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம், இத்தகைய இணைப்பு வசதிகளை மேம்படுத்தும். ஹால்டியாவிலிருந்து பல்வேறு துறைமுகங்களுக்கு சரக்குகள், நெரிசல் மற்றும் காலதாமதங்களிலிருந்து விடுபட்டு, குறுகிய காலத்தில் சென்றடையும். இங்கு, பன்முனைப் போக்குவரத்து முனையம் ஒன்றை உருவாக்குவதற்கான பணிகளை இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் காரணமாக, சுயசார்பு இந்தியாவிற்கான மகத்தான ஆற்றல் பெற்ற மையமாக ஹால்டியா உருவெடுக்கும். இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்காக, திரு.தர்மேந்திர பிரதானையும், அவரது ஒட்டுமொத்த குழுவினரையும் நான் பாராட்டுவதோடு, சாமான்ய மக்களின் துயரங்களை, குறுகிய காலத்திற்குள் போக்கவும், இந்தக் குழுவினரால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நிறைவாக, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இந்த வசதிகளை ஏற்படுத்தியதற்காக, மீண்டும் ஒருமுறை, எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PM Modi’s Vision Is Propelling India Into Global Big League Of Defence, Space & Tech

Media Coverage

How PM Modi’s Vision Is Propelling India Into Global Big League Of Defence, Space & Tech
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 15, 2025
April 15, 2025

Citizens Appreciate Elite Force: India’s Tech Revolution Unleashed under Leadership of PM Modi