மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். விவாதத்தில் பங்கேற்ற, பங்களித்த மேலவையின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு.மதன்லால் சைனிக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த பெரும் வெற்றி, நிலையான அரசை குடிமக்கள் விரும்புவதைக் காட்டுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நிலையான அரசைத் தேர்ந்தெடுக்கும் போக்கு தற்போது பல்வேறு மாநிலங்களிலும் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளைப் பாராட்டிய பிரதமர், தேர்தல் பணி மொத்தமும் அளவில் மிகப் பெரியது என்றார். சில தலைவர்கள், “ஜனநாயகம் தொலைந்து விட்டது” என்று அறிக்கை விட்டது துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் தெரிவித்தார். வாக்காளர்களின் அறிவுத்திறனை கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் உறுப்பினர்களைக் கேட்டு கொண்டார். நமது தேர்தல் செயல்பாடுகளையும், ஜனநாயகத்தையும் மதிப்பது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை விமர்சித்த பிரதமர், இந்த இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதையும், வன்முறை சம்பவங்களையும் வெகுவாக குறைத்திருப்பதாகக் கூறினார். “தற்போது வாக்களிப்பு சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி” என்று அவர் தெரிவித்தார். வாக்களிப்பை சரிபார்க்கும் சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவில் தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த வேண்டியிருப்பது மிகவும் அவசியமானது என்றார். இதனையொட்டி “ஒரு நாடு ஒரு தேர்தல்” போன்ற தேர்தல் சீர்திருத்தத் திட்டங்களைப் பற்றி ஆலோசிப்பதும், விவாதிப்பதும் முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக மத்திய அரசு பாடுபடுகிறது என்று தெரிவித்த அவர், எளிய மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதில் அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றார். வீடு, மின்சாரம், எரிவாயு இணைப்பு, கழிப்பறை போன்ற வசதிகளை நாட்டு குடிமக்களுக்கு உறுதி செய்வதற்காக அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு. மோடி கேட்டுக் கொண்டார். இந்த இலக்கை அடைவதற்கு ஆக்கப்பூர்வமான மனப்பாங்குடன் பணியாற்றுமாறும், தகுந்த ஆலோசனைகள் வழங்குமாறும் அவர் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.

ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு தம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், நமது நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றார். ஒரு சம்பவத்திற்காக ஒட்டு மொத்த மாநிலத்தையும் தூற்றுவது சரியல்ல என்று கூறிய அவர், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற அனைத்து சம்பவங்களின் மீதும், அவை எந்த மாநிலத்தில் நடந்தாலும் சரி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இத்தருணத்தில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறிய திரு. மோடி, ஏழை மக்களுக்கு உயர்தரமான மருத்துவச் சிகிச்சை, சிக்கனமான கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்றார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக வலுவான கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கூட்டுறவான கூட்டாட்சி பற்றி குறிப்பிட்ட பிரதமர் “பிராந்திய விருப்பங்களுடன் கூடிய தேசிய இலக்கை” கொண்டிருப்பது முக்கியமானது என்றார்.

நாட்டை சிறப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதற்கு குடிமக்கள் தம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் ஒவ்வொருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar

Media Coverage

'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership